எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

மெய்யான ஆராதனை வீரர்கள்

அவளுக்கு திருச்சபைக்கு போவதற்கு கடைசியாய் வாய்ப்பு கிடைத்தது. சபையின் அடித்தளத்தில், ஒரு சிறு குகையை அவள் அடைந்தாள். மெழுகுவர்த்திகள் நிறைந்த அந்த குறுகிய இடத்தில், தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள், தரையின் ஒரு மூலையைக் காட்டுகிறது. மார்பிள் தரையில் பதினான்கு புள்ளிகள் உள்ள ஒரு வெள்ளி நட்சத்திரம் இருந்தது. பெத்லெகேமில் இயேசு பிறந்தார் என்று பாரம்பரியமாய் நம்பப்படுகிற ஆலயத்தில் அவள் இருந்தாள். ஆனாலும் அந்த இடத்தை விட தேவன் மிகவும் பெரியவர் என்று நம்பினதினால், எழுத்தாளர் ஆனி டில்லார்ட் அந்த இடத்தினால் அப்படியொன்றும் பெரிதாய் ஈர்க்கப்படவில்லை. 

ஆனால் அதுபோன்ற ஸ்தலங்கள் நம்முடைய விசுவாச கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. இயேசுவுக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இன்னொரு முக்கியமான ஸ்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்” (யோவான் 4:20) என்று கெர்சோம் மலையைக் குறித்து (உபாகமம் 11:29ஐ காண்க) சமாரிய ஸ்திரீ கூறினாள். எருசலேமை புனிதஸ்தலமாய் கருதி அங்கே ஆராதனை செய்யவேண்டும் என்ற யூத முறைமைக்கு முரண்பாடாய், சமாரியர்கள் கெர்சோம் மலையை புனிதமாய் கருதினர் (வச. 20). ஆனால் ஆராதனை என்பது இடத்தைப் பொருத்தது அல்ல நபர்களைப் பொருத்தது என்று இயேசு அறிவித்தார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்” (வச. 23). மேசியாவைக் குறித்த தன்னுடைய நம்பிக்கையை அந்த பெண் வெளிப்படுத்தினாள். ஆனால் அவள் மேசியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை அறியாதிருந்தாள். “அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (வச. 26). 

தேவன் எந்த மலைக்கும், பூகோள நிலப்பரப்பிற்கும் உட்பட்டவரல்ல. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருடைய சிங்கானத்தை தைரியமாய் அண்டி, “எங்கள் பிதாவே” என்று நாம் கூப்பிடும்போது, அவர் அங்கே இருக்கிறார் என்பதே நம்முடைய மெய்யான மேன்மை. 

நம்மேல் தேவனின் களிகூறுதல்

எங்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து பதினேழு மாதங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தையைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஆண் குழந்தையை பராமரிப்பது குறித்து எனக்கு ஓரளவு தெரியும், பெண் குழந்தையைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதினால் எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. நாங்கள் அவளுக்கு சாரா என்று பெயரிட்டோம். அவளைத் தூங்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றதால் என் மனைவி சற்று ஓய்வெடுத்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவளை தூங்கப்பண்ணும்பொருட்டு நான் “நீரே என் சூர்யோதயம்” என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினேன்.அவளை என் தோள்மீது போட்டுக்கொண்டு அப்பாடலை ரசித்துப் பாடினேன். தற்போது அவளுக்கு 20 வயதாகிறது. இன்னும் அவளை சூர்யோதயம் என்றே அழைப்பது வழக்கம்.

நாம் தூதர்கள் பாடி களிகூருவார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் களிகூர்ந்தார் என்பதை நீங்கள் கடைசியாய் கேள்விப்பட்டது எப்போது? அதிலும் அவர் உங்களைக் குறித்து களிகூர்ந்தார் என்பதை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? எருசலேமுக்கான செப்பனியாவின் செய்தியில், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் ; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) என்று கூறுகிறார். இது எருசலேமுக்கு உரைக்கப்பட்ட செய்தியாயினும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் பேரிலும் தேவன் கெம்பீரமாய் களிகூருவார். அவர் எந்த பாடலைப் பாடுவார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த பாடல் நிச்சயமாய் அவருடைய அன்பிலிருந்தே உதயமாகும். எனவே அதை உண்மையானது, ஒழுக்கமானது, நீதியுள்ளது, கற்புள்ளது, அன்புள்ளது மற்றும் நற்கீர்த்தியுள்ளது என்று நம்பலாம் (பிலிப்பியர் 4:8).

எதுவாக இருந்தாலும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையில், என் குடும்பத்தினர் பார்க்கும் தேசியச் செய்தியில், ஒரு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பு நிறைவு செய்யப்படுகிறது. “புனித வெள்ளி” அன்று,கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்த பிறகு, தன்னுடைய பிளாஸ்மாவை தன்னைப்போல இந்த நோய்க் கிருமிக்கு எதிராக போராடுபவர்களுக்கு தானம் கொடுக்க முடிவெடுத்த ஒரு நிருபரை மையமாகக் கொண்டு, நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ஆனால், எதிர்பொருள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நடுவர் குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. பலர் உதவியற்றவர்களாக உணர்ந்தபோது, பிளாஸ்மாவை (ஊசி வழியாக) தானம் செய்வதில் இருந்த உபாதைகளை அறிந்தபோதும், அவள் அதை “சாத்தியமான ஊதியத்தை செலுத்த ஒரு சிறிய விலை” என்று உணர்ந்தாள். 

அந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பிற்குப் பிறகு, நானும் என் குடும்பத்தினரும் ஊக்குவிக்கப்பட்டதாக உணர்ந்தோம் - சொல்லப்போனால் நம்பிக்கையினால் நிறைந்திருந்தோம். பிலிப்பியர் 4:8ல் பவுல் குறிப்பிட்டிருக்கிற “எவைகளோ” வின் வல்லமை இது தான். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ”, (வச. 8). பவுலின் மனதில் பிளாஸ்மா தானத்தைப் பற்றி எண்ணம் இருந்ததா? நிச்சமாக இல்லை. ஆனால் தேவையோடு இருக்கும் ஒருவருக்காக தியாகச் செயல்கள் என்பது அவரது மனதில் இருந்ததா – வேறுவிதமாகக் கூறினால், கிறிஸ்துவைப் போல நடத்தை? சந்தேகமே இல்லை – பதில் ஆம் தான்.

ஆனால் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டிருக்காவிட்டால் அது முழு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. நம்மைச் சுற்றி நடக்கும் “எவைகளையோ” நாம் பார்ப்பதும், கவனிப்பதும், தேவனுடைய நன்மைகளுக்கு சாட்சிகளாவதும், சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும் நமக்கு சிறப்புரிமையாகும்.

ஒரு நல்ல காரணம்

பாதையின் இருபுறத்திலும் அவர்களின் இருக்கைகள் அமைந்திருந்தது. இரண்டு மணி நேர விமான பயணம். அவர்களுக்கு என்னால் உதவமுடியவில்லை என்றாலும் அவர்களின் சில பேச்சுகள் என் காதில் விழுந்தது. அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது தெளிவாய் தெரிகிறது. உறவினராய் கூட இருக்கலாம். இருவரில் இளையவராய் இருந்தவர் (ஏறத்தாழ 60 வயது இருக்கும்) மூத்தவருக்கு (ஏறத்தாழ 90 வயது இருக்கலாம்) தன்னுடைய கைகளை அடிக்கடி நீட்டி ஆப்பிள் துண்டுகள், வீட்டில் தயாரித்த சான்ட்விட்ச், துடைக்கும் துண்டு என மரியாதையோடு கொடுத்துக்கொண்டேயிருந்தார். அந்த விமானத்திலிருந்து இறங்கியபோது, அந்த இளைய பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் அக்கறையெடுத்துக்கொண்ட விதம் அழகாய் இருந்தது” என கூறினேன். அதற்கு அவர்கள், “அவர் என்னுடைய நெருங்கிய சிநேகிதி, என்னுடைய அம்மா” என்று சொன்னார்கள். 

நாம் எல்லோரும் அப்படி சொன்னால் எவ்வளவு அழகாயிருக்கும்? சில பெற்றோர்கள் நல்ல நண்பர்களாய் இருப்பர். சில பெற்றோர்கள் அப்படியிருப்பதில்லை. உறவுகள் மேன்மையாய் அமைவதற்கு சில சிக்கல்கள் உண்டு. பவுல் தீமோத்தேயுக்கு எழுதிய நிருபம் அந்த சிக்கல்களை மறுக்கவில்லை. ஆனாலும் நம்முடைய பெற்றோர்களையும், பாட்டி தாத்தாவையும், உறவினர்களையும், நம் வீட்டாரையும் பராமரித்து தேவபக்தியாய் நடந்துகொள்ளும்படிக்கு அறிவுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 5:4,8).

நம்முடைய குடும்பத்து நபர்கள் நமக்கு நல்லவர்களாய் தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீது நாம் அக்கறை எடுத்துக்கொள்வோம். அதாவது, அவர்கள் அதற்கு தகுதியானவர்களாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்களை பராமரிப்பதற்கு பவுல் மிக அழகான ஒர் காரணத்தை சொல்லுகிறார். ஏனென்றால், அது “தேவனுக்கு முன்பாக பிரியமாயிருக்கிறது” (வச. 4). 

அவசர ஜெபமல்ல

ஹவாய் தீவின் மக்களைக் குறித்து ஆலிஸ் கஹோலுசுனா சொல்லும்போது, அவர்கள் தங்கள் கோயில்களுக்குள் நுழையுமுன் கோயில் வாசலில் வெகுநேரம் அமர்ந்திருந்து தங்களை சுத்திகரித்துக்கொண்ட பின்புதான் உள்ளே செல்லுவார்களாம். உள்ளே நுழைந்த பின்பும் தங்கள் விண்ணப்பத்துடன் பலிபீடத்திற்கு பயபக்தியுடன் ஊர்ந்து செல்லுவார்களாம். பின்பு கோயிலின் வெளியே வந்து மீண்டும் வெகுநேரம் அமர்ந்திருந்து, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை நினைத்து, அதற்கு உயிர் கொடுப்பார்களாம். 

கிறிஸ்தவ மிஷனரிகள் ஹவாய் தீவிற்கு வந்தபோது, அவர்களின் ஜெபிக்கும்முறை இந்த தீவின் மக்களை திருப்திபடுத்தவில்லை. மிஷனரிகள் எழுந்திருந்து, ஒரு சில வாக்கியங்களைச் சொல்லி, கடைசியில் ஆமென் சொல்லி முடித்துவிட்டார்கள். இந்த ஜெபத்தை ஹவாய் தீவின் மக்கள், “ஜீவனில்லாத ஜெபம்” என்று அழைக்கிறார்கள். 

இந்த சம்பவம், தேவ ஜனங்கள் “அமர்ந்திருந்து… அறியுங்கள்” (சங்கீதம் 46:10) என்னும் சத்தியத்தை முழுமையாய் அனுபவிக்கவில்லை என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடைய ஜெபங்கள் பெரியதோ அல்லது சிறியதோ, தேவன் நம் ஜெபத்தை கேட்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கை நம் இருதயத்தை பிரதிபலிக்கிறது. நம்முடைய ஜெபங்கள் மூலமாக தேவன் நம்மிடத்தில் மட்டுமல்லாது, நம்மை சுற்றிலுமிருக்கிற மக்களின் வாழ்க்கையிலும் கிரியை செய்ய அனுமதிக்கவேண்டும். இதுபோன்று எத்தனை முக்கியமான தருணங்களை இழந்து நம்முடைய ஜெபங்களை அவசரஅவசரமாய் “ஆமென்” சொல்லி முடித்திருக்கிறோம்?     

நமக்கு முன்பாக மெல்லமாய் நடந்து செல்லுபவர்களைக் கண்டாலோ அல்லது சாலை நெருக்கடிகளிலோ நாம் அடிக்கடி பொறுமையிழப்பது இயல்பு. ஆனால் தேவன் நம்மை அமர்ந்திருக்கச் சொல்லுகிறார். “நீங்கள் அமர்ந்திருங்கள், நன்றாய் மூச்சை இழுத்துவிடுங்கள், பொறுமையாக செல்லுங்கள், நானே உங்கள் அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமான தேவன் என்பதை மறந்துவிடாதீர்கள்”  என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை நேர்த்தியாய் செய்வதற்கு, நாம் தேவனை தேவனென்று அறிய வேண்டும்; அவரையே நம்பவேண்டும்; அவருக்காக வாழவேண்டும். 

தேவனோடு நேரம் செலவழித்தல்

“அதின் வழியாய் ஓர் ஆறு கடந்து செல்கிறது” - இது நார்மன் மெக்லீனின் தலைசிறந்த ஒரு கதை. அமெரிக்காவின் மேற்கத்திய மாகாணத்தில் உள்ள பிரஸ்பிடேரியன் திருச்சபையின் போதகரையும் அவருடைய இரண்டு மகன்களையும் குறித்த கதை. ஞாயிற்றுக் கிழமை காலையில் பொதுவாக நார்மன் மற்றும் அவனுடைய சகோதரன் பால் ஆகிய இருவரும் தங்கள் அப்பாவுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு திருச்சபை செல்வது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை மாலையிலும் ஆராதனை இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் அப்பா தன் இரண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நீரோட்டம் பாயும் மலைப்பாதைகளில் உலாவச் செல்வார். தன் ஆத்துமாவை உயிர்பிக்கவும், மாலை பிரசங்கத்திற்கு தன்னை மனரீதியாய் ஆயத்தப்படுத்தவும், அதை அவர் சுயநினைவோடே தொடர்ந்து செய்துவந்தார்.

இயேசு மலைகளிலும் பட்டணங்களிலும் அநேகருக்கு போதனை செய்வதையும், அவரிடத்தில் கொண்டுவரப்பட்ட வியாதியஸ்தர்களை சுகமாக்கியதையும் சுவிசேஷஷமெங்கிலும் பார்க்கமுடியும். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்னும் தனது வேலையை இயேசு உண்மையாய் செய்தார் (லூக். 19:10). ஆனாலும் அடிக்கடி கூட்டத்தை விட்டு தன்னை தனிமைப்படுத்துவதை பார்க்கமுடியும் (5:16). அந்த தனிமையில் தன் பிதாவோடு நேரம் செலவழித்து, பூமியில் தனக்கு பிதாவினால் ஒப்புவிக்கப்பட்ட வேலையைத் தொடர்ந்து செய்ய தன்னை பலப்படுத்திக்கொள்வது இயேசுவின் வழக்கம்.

நம்முடைய ஊழியப்பாதையில் இயேசுவின் இந்த தனிமைப்படுத்தலை நினைவுகூறுவது நல்லது. இயேசுவுக்கே இந்த தனிமை அவசியப்பட்டதென்றால், நாம் எம்மாத்திரம்? நம்மை பொங்கி வழிந்தோடச் செய்யும் தேவனோடு தனிமையில் நேரம் செலவழிக்கப் பழகுவோம்.

தேவனுடைய ராஜ்யம்

என்னுடைய தாயார் அவருடைய வாழ்நாளில் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், சிறு பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிப்பதில் அதிக ஆர்வம் காண்பித்தார். தேவையில்லாத செலவு என்று சிறுவர் ஊழியத்திற்கு சபை ஓதுக்கிய நிதியை தடைசெய்ய சிலர் முயற்சி செய்தபோது, தன்னுடைய கருத்துவேறுபாட்டை எனது தாயார் வெளிப்படையாய் முன்வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். “என்னுடைய பிரசவகாலத்தில் ஒரேயொரு கோடைவிடுமுறையில் மட்டும் இந்த ஊழியத்தை நான் தவிர்க்கநேரிட்டது, அவ்வளவுதான்” என்று என் தாயார் என்னிடத்தில் கூறியிருக்கிறார். என்னுடைய கணக்கின்படி, எனது தாயார் தொடர்ந்து 55 ஆண்டுகள் இந்த ஊழியத்தை சபை மூலமாக செய்து வருகிறார்.

இயேசு சிறுபிள்ளைகளைச் சந்திக்கும் சுவிசேஷத்தின் பிரபலமான சம்பவம் மாற்கு 10ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் ஆசீர்வாதம் பெறும்படிக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவை நெருங்கவிடாமல் சீஷர்கள் தடைசெய்தனர். அதைக் கண்டு இயேசு விசனமடைந்தார் என்று மாற்கு பதிவுசெய்கிறார். அத்துடன் தன் சீஷர்களை நோக்கி, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (வச. 14) என்று கடிந்துகொள்கிறார்.

சார்லஸ் டிக்கன்ஸ் இப்படியாக எழுதுகிறார், “இந்த சிறுவர்களை நான் நேசிக்கிறேன்; தேவனால் அருளப்பட்ட இந்த புதிய வரவுகள் நம்மை நேசிப்பது சாதாரண விஷயம் கிடையாது.” அதேபோன்று மூத்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் அன்பிலிருந்து சிறுவர்களை இடறப்பண்ணுகிற செயல்களைச் செய்யாமல் கவனமாய் இருப்பதும் சாதாரண விஷயமல்ல.

நடந்து போ, ஓடாதே!

ஒவ்வொரு நாளின் விடியலையும் அவள் வரவேற்பதை நான் காண்கிறேன். அவள் எங்கள் உள்ளூர் பவர் வாக்கர். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, அவள் சாலையின் முனையில் இருப்பாள். பெரிய ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, முழங்கால் உயரமான, வண்ணமயமான சாக்ஸ் போட்டுக்கொண்டு, அவளது கைகள் மற்றும் கால்களை மாறி மாறி இயக்கி நடந்து கொண்டு, எப்போதுமே ஒரு காலை தரையில் வைத்தவளாய் இருப்பாள். இந்த விளையாட்டு சாதாரணமான ஓடுகிற பயிற்சி விளையாட்டல்ல; இது வேறுபட்டது. பவர் வாக்கிங் என்பது ஒரு அவசியமான கட்டுப்பாட்டை உள்ளடக்கியது, ஓடுவதற்கான உடலின் இயற்கையான விருப்பத்தின் மறுசீரமைப்பு. இது ஓடுவது போல் தெரியவில்லை என்றாலும், ஓடுவதற்கு அல்லது ஜாகிங் செய்வதற்கு எவ்வளவு ஆற்றல், கவனம் மற்றும் சக்தி தேவையோ, இதை செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை. ஆனால் இது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயிற்சி.

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சக்தி - அதுதான் முக்கியம். பவர் வாக்கிங் போன்ற வேதாகம மனத்தாழ்மை பெரும்பாலும் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை, அது இல்லை. தாழ்மை என்பது நம் பலங்களையும் திறன்களையும் குறைக்கவில்லை; மாறாக, ஒரு அதிகாலை பவர் வாக்கிங் செய்பவரை அவருடைய மனது எப்படி கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறதோ, அதைப் போலவே மனத்தாழ்மை நம்மை கட்டுப்படுத்துகிறது.

“மனத்தாழ்மையாய் நட” என்ற மீகாவின் வார்த்தைகள் தேவனை மீறிப்போகும் நம்முடைய விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது. அவர் “நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகி” என்று கூறுகிறார் (6:8). அத்தோடு ஏதாவது செய்ய வேண்டும், அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவரக்கூடும். நம் உலகில் அன்றாட அநீதிகள் மிக அதிகமாக இருப்பதால் அது நியாயமானது. ஆனால் நாம் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். பூமியில் அவருடைய ராஜ்யத்தின் விடியலில் அவருடைய விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.

எளியோருக்கு உதவுதல்

அவர் பெயர் ஸ்பென்சர். ஆனால் எல்லோரும் அவரை "ஸ்பென்ஸ்" என்று அழைக்கிறார்கள். அவர் உயர்நிலைப் பள்ளியில் மாநில தடகள சாம்பியனாக இருந்தார்; பின்னர் அவர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் படித்தார். அவர் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில் வசித்து வருகிறார், மேலும் ரசாயன பொறியியல் துறையில் மிகவும் மதிக்கப்படும் நபராக  இருக்கிறார். ஆனால் இன்றுவரை ஸ்பென்ஸின் மிகப்பெரிய சாதனைகளை என்றூ நீங்கள் அவரிடம் கேட்டால், அவர் மேற்கண்ட விஷயங்களில் எதையும் குறிப்பிட மாட்டார். சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் தேவை மிகுந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணங்கள் மூலம்  நாட்ட்டின் வறுமை நிறைந்த பகுதிகளில் தான் நிறுவுவதற்கு உதவிய பயிற்சி திட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க உற்சாகமாக கூறுவார். அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவரது வாழ்க்கை எவ்வளவு வளமானதாக இருந்தது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்லுவார்.

"இவர்களில் மிக சிறியவர்கள்." இந்த சொற்றொடரை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவர், எனினும்,, உலக வழக்கத்தின்படி, நமது சேவைக்கு கைம்மாறாக  நமக்கு வழங்குவதற்கு சொற்பமாக வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றும் இல்லாதவர்களை விவரிக்க இயேசு இதைப் பயன்படுத்தினார். அவர்கள் உலத்தால்  பெரும்பாலும் கவனிக்கப்படாத - முற்றிலும் மறக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆயினும்கூட, "நீங்கள் [அவர்களுக்காக] எதை செய்தாலும், எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25:40) என்று சொல்வதன் மூலம் அவர்களை இயேசு அத்தகைய சிறந்த நிலைக்கு அந்த மக்களை உயர்த்துகிறார். இந்த “சிறியவர்களுக்கு” உதவி செய்வது கிறிஸ்துவுக்கு  சேவை செய்வதற்கு சமம்: என்று கிறிஸ்து சொல்லும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டியதில்லை. இதை உண்மையில் எற்றுக்கொள்ள விருப்பமுள்ள இதயம் மட்டுமே போதும்.